மேற்கு தொடர்ச்சி மலை

கன்னியாகுமரி முதல் குஜராத் வரை 1600 கி.மீ வரை பரவி கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலை(Western Ghat) இந்தியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

உலகில் பல்லுயிர் வளம் கொண்ட எட்டு இடங்களில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.மேலும் UNESCOவின் பாரம்பரிய தளமாகவும் இம்மலை விளங்குகிறது.

கோதையாறு மேற்கு தொடர்ச்சி மலை, கன்னியாகுமரி . ©$heik




வளங்கள்

இங்கு 7000க்கும் அதிகமான பூக்கும் தாவரங்களும், 1800 வகை பூக்காத தாவரங்களும்,508 வகை பறவையினங்களும், 139 வகை பாலூட்டிகளும், 179 வகை நீர், நில வாழ்வனைகளும் மேலும் பல வகை பூச்சிகளும், மீன்களும், மூலிகைச் செடிகளும் இம்மலையில் இருக்கின்றன.பல்வகை வனவளம், கனிமவளம் என இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் வளங்கள் கொட்டி கிடக்கிறது.


Image © Abdul Hakeem



இம்மலையில் மட்டும் 14 தேசிய பூங்காக்கள், 44 காட்டுயிர் சரணாலயங்கள் மற்றும் 11 புலிகள் காப்பகங்கள் உள்ளன.


இந்தியாவிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில்தான் யானைகள் அதிகம் இருக்கின்றன.அதுபோல உலகின் புலிகள் எண்ணிக்கையில் 25% புலிகள் மேற்கு தொடர்ச்சி மலையில்தான் இருக்கின்றன.



Lion Tailed Macaque எனும் சோலை மந்தி, Nilgiri Tahr எனும் வரையாடு, Nilgiri Langur எனும் கருங்குரங்கு, Nilgiri Marten எனும் கரும்வெருகு போன்ற உயிரினங்கள் இங்கு மட்டுமே வாழ்கின்றன.

வரையாடு - Nilgiri tahr


பறவைகளும், அதிக தாவரங்களும், தாவரங்களை உண்ணும் தாவர உண்ணிகளும், தாவர உண்ணிகளை உண்ணும் ஊன் உண்ணிகளும் இருப்பதினால் பல்லுயிர் வள சங்கிலி தொடர்ச்சியால் செழிப்பான வளமாக திகழ்கிறது.



மழை தரும் மலை! 

மேற்கு தொடர்ச்சி மலையானது அரபிக் கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை தடுத்து தென் மாநிலங்களில் நல்ல மழையை தருகிறது.வெப்ப காலங்களில் அதிக வெப்பம் தாக்காதவாறும், குளிர் காலங்களில் அதிக குளிர் தாக்காதவாறும் தென் மாநிலங்களின் பருவநிலையை சமன் செய்கிறது.

நதிகளின் தாய்மடி

தென் மாநிலங்களில் பாயும் பெரும்பாலான நதிகளின் நீராதாரமாகத் திகழும் இந்த மலையை தென்னக நதிகளின் தாய்மடி என்றழைக்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.ஏறத்தாழ 1,500 மீட்டர் உயரத்துக்கும் மேலே உள்ள சோலைக்காடுகளின் புல்வெளிகள்தான், மழைநீரைத் தேக்கிவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் தண்ணீர்த் தொட்டிகள்.

சிதைக்கப்படும் வளம்

லட்சக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் உயிர்ச்சூழல் மையமான மேற்குத் தொடர்ச்சி மலையை நாம் அழிக்கத் தொடங்கிவிட்டோம். மலையையும், வனத்தையும் பாதுகாக்க பல சட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவற்றை கான்கிரீட் காடுகளாக மாற்றுவதை யாரும் நிறுத்தவில்லை.

சுற்றுலா வணிகமாக மாறி வரும் மேற்கு தொடர்ச்சி மலையில் காடுகளை அழித்து கட்டிடங்கள் வந்து கொண்டே இருந்தால் ஒரு காலத்தில் கட்டிடங்கள் கொண்ட கான்கிரீட் காடுகளாகத்தான் இருக்கும்.



பின்பு அதன் பொழிவை இழந்து சோலைகள் பாலைகளாக மாறி காட்சியளிக்கும்.

எந்த வியாபார நோக்கத்திற்காக கட்டிடங்கள் தோன்றியதோ பின் இயற்கை அழிந்த பிறகு அந்த வியாபாரமும் அழியும்! பல்லுயிர் வளமும் அழியும்! 

வணிக நோக்கத்தோடு பார்க்கப்படும் இந்தியாவின் சொத்தான மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருவாச்சி

வால்பாறை வாலாட்டி